Skip to main content

விடை 3918

இன்றைய வெடி:
முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4)
அதற்கான விடை:  சுரும்பு = வண்டு, முரலும் (அதாவது, ரீங்காரமிடும்) குணம் கொண்ட உயிரி.

சுரும்பு = ரும்பு  + சு
ரும்பு = அரும்பு(மொட்டு) ‍- அ
சு = சுகந்தம் தொடக்கம்

சுரும்பு என்றால் வண்டு என்று எப்போதோ சங்கப்பாடல் குறித்த புத்தகத்தில் படித்திருக்கிறேன்.   இன்று புதிரை வெளியிட்டபின் தேடியதில் இணையத்தின் மூலம் கிடைத்த இரண்டு  இலக்கிய உதாரணங்கள்
"சுரும்பு உணக் கிடந்த நறும் பூ" ‍‍‍  சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணம் முடிந்த பின் வருகிறது.  வண்டு (தேனை) உண்ணுவதற்கு வந்து கிடந்த நறும்பூ என்று இதன் பொருள்.
அகநானூற்றுப் பாடலொன்றில்
" சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்"


கிராமங்களிலோ, இலங்கையிலோ சுரும்பு என்ற சொல் புழக்கத்திலுள்ளதா? தெரியவில்லை.

இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

Comments

Raghavan MK said…
************************
_முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4)_

_முரலுவது_
= *வண்டு*
(முரலுதல் வண்டின் இமிழும் ஒசை.)

_மொட்டு_ = *அரும்பு*
_முனை கிள்ளிய மொட்டு_
= *ரும்பு*

_சுகந்தமான தொடக்கத்தால் வந்து_
= *சு* (கந்தமான)+ *ரும்பு*
= *சுரும்பு* (வண்டு)
= _முரலுவது_
************************* 
*அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சுரும்பு*
பொருள்
*வண்டு* – ஆண்வண்டு
மலை
*_வாக்கிய பயன்பாடு_*
பாதயெல்லாம் செடி, கொடி வளர்ந்து காடா கெடக்கு; சாக்கிரதையா போ; *சுரும்பு* ஏதாவது கடிச்சிட, கிடிச்சிட போவுது.

*இலக்கிய பயன்பாடு*
பாடல்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

_மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்_
_*சுரும்பும்* மூசாச் சுடர்ப்பூங் காந்தள்_
_பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்_

*கருத்து உரை*
மரம் தாவுவதில் வல்ல குரங்குகளும் 
ஏறுவதற்கு கடினமான வகையில் 
மிக உயரமாக வளர்ந்து 
நிற்கும் மரங்களையுடைய 
மலைப்பக்கத்தில், 
*வண்டு* களாலும் மொய்க்க இயலாத 
அதிக உயரத்தில்  சுடர் விட்டு எரியும் தீயைப் போன்ற 
நிறமுடைய செங்காந்தள் 
மலர்களால்  ஆன குளிர்ச்சி பொருந்திய பெரிய‘கண்ணி‘யைத் தலையில் அணிந்த  திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான்.
************************
💐🙏🏼
Unknown said…
அபிராமி அந்தாதி: பாடல் 94
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழி தடுமாரி முன் சொன்னதெல்லலாம்
தரும் பித்தர் ஆவதென்றால் அபிராமி சம்யம் நன்றே

வண்டைப் போல் களித்து சொல்லும் தடுமாறி
Sundar said…
சுரும்பு (குறிப்பாக இலங்கையில்) Drone என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது!
Vanchinathan said…
இவ்வெடிப் பக்கங்களுக்கு ஒரு இலங்கைத் தமிழர் முன்பு வந்திருக்கிறார். அவரால் இதைப் பற்றிச் சரியான தகவலை அளிக்க முடியும். வேலை மிகுதியால் வருவதில்லை போலும்.
Unknown said…
நான் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் drones புழக்கத்தில் இருந்தது இல்லை. அத்தோடு சுரும்பு என்ற சொல் drone ஐ குறிக்க இப்போது பாவிக்கப்படுவதாக நான் அறியவில்லை. ஆனால் சுரும்பு என்ற சொல் தேவாரங்களில் வருவதால் சைவசமயம் ( வகுப்பு 1 முதல் 11 வரை சமயம் கட்டாயபாடம்) படித்தவர்களுக்குச் சாதாரணமாகத் தெரிந்திருக்கும் ஒரு சொல். குறிப்பாக “தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார் மலர் இண்டை கட்டி” என்ற தேவராம் எட்டாம்/ஒன்பதாம் வகுப்புகளில் சொல்லித்தரப் பட்டது.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்