Skip to main content

விடை 3918

இன்றைய வெடி:
முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4)
அதற்கான விடை:  சுரும்பு = வண்டு, முரலும் (அதாவது, ரீங்காரமிடும்) குணம் கொண்ட உயிரி.

சுரும்பு = ரும்பு  + சு
ரும்பு = அரும்பு(மொட்டு) ‍- அ
சு = சுகந்தம் தொடக்கம்

சுரும்பு என்றால் வண்டு என்று எப்போதோ சங்கப்பாடல் குறித்த புத்தகத்தில் படித்திருக்கிறேன்.   இன்று புதிரை வெளியிட்டபின் தேடியதில் இணையத்தின் மூலம் கிடைத்த இரண்டு  இலக்கிய உதாரணங்கள்
"சுரும்பு உணக் கிடந்த நறும் பூ" ‍‍‍  சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணம் முடிந்த பின் வருகிறது.  வண்டு (தேனை) உண்ணுவதற்கு வந்து கிடந்த நறும்பூ என்று இதன் பொருள்.
அகநானூற்றுப் பாடலொன்றில்
" சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்"


கிராமங்களிலோ, இலங்கையிலோ சுரும்பு என்ற சொல் புழக்கத்திலுள்ளதா? தெரியவில்லை.

இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

Comments

Raghavan MK said…
************************
_முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4)_

_முரலுவது_
= *வண்டு*
(முரலுதல் வண்டின் இமிழும் ஒசை.)

_மொட்டு_ = *அரும்பு*
_முனை கிள்ளிய மொட்டு_
= *ரும்பு*

_சுகந்தமான தொடக்கத்தால் வந்து_
= *சு* (கந்தமான)+ *ரும்பு*
= *சுரும்பு* (வண்டு)
= _முரலுவது_
************************* 
*அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சுரும்பு*
பொருள்
*வண்டு* – ஆண்வண்டு
மலை
*_வாக்கிய பயன்பாடு_*
பாதயெல்லாம் செடி, கொடி வளர்ந்து காடா கெடக்கு; சாக்கிரதையா போ; *சுரும்பு* ஏதாவது கடிச்சிட, கிடிச்சிட போவுது.

*இலக்கிய பயன்பாடு*
பாடல்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

_மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்_
_*சுரும்பும்* மூசாச் சுடர்ப்பூங் காந்தள்_
_பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்_

*கருத்து உரை*
மரம் தாவுவதில் வல்ல குரங்குகளும் 
ஏறுவதற்கு கடினமான வகையில் 
மிக உயரமாக வளர்ந்து 
நிற்கும் மரங்களையுடைய 
மலைப்பக்கத்தில், 
*வண்டு* களாலும் மொய்க்க இயலாத 
அதிக உயரத்தில்  சுடர் விட்டு எரியும் தீயைப் போன்ற 
நிறமுடைய செங்காந்தள் 
மலர்களால்  ஆன குளிர்ச்சி பொருந்திய பெரிய‘கண்ணி‘யைத் தலையில் அணிந்த  திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான்.
************************
💐🙏🏼
Unknown said…
அபிராமி அந்தாதி: பாடல் 94
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழி தடுமாரி முன் சொன்னதெல்லலாம்
தரும் பித்தர் ஆவதென்றால் அபிராமி சம்யம் நன்றே

வண்டைப் போல் களித்து சொல்லும் தடுமாறி
Sundar said…
சுரும்பு (குறிப்பாக இலங்கையில்) Drone என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது!
Vanchinathan said…
இவ்வெடிப் பக்கங்களுக்கு ஒரு இலங்கைத் தமிழர் முன்பு வந்திருக்கிறார். அவரால் இதைப் பற்றிச் சரியான தகவலை அளிக்க முடியும். வேலை மிகுதியால் வருவதில்லை போலும்.
Unknown said…
நான் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் drones புழக்கத்தில் இருந்தது இல்லை. அத்தோடு சுரும்பு என்ற சொல் drone ஐ குறிக்க இப்போது பாவிக்கப்படுவதாக நான் அறியவில்லை. ஆனால் சுரும்பு என்ற சொல் தேவாரங்களில் வருவதால் சைவசமயம் ( வகுப்பு 1 முதல் 11 வரை சமயம் கட்டாயபாடம்) படித்தவர்களுக்குச் சாதாரணமாகத் தெரிந்திருக்கும் ஒரு சொல். குறிப்பாக “தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார் மலர் இண்டை கட்டி” என்ற தேவராம் எட்டாம்/ஒன்பதாம் வகுப்புகளில் சொல்லித்தரப் பட்டது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்