Skip to main content

பூங்காவில் புறப்பட்ட புயல்

பத்து வருடங்களுக்கு முன்பு  திடீரென்று ஒரு விபரீத  ஆசை  எனக்கு விளைந்தது.  நாமும் ஒரு கதை எழுதினால் என்ன? இத்தனை கதைகள் படித்திருக்கிறோம், பல விதமான எழுத்தாளர்களின் எழுத்துநடையையும் கவனித்திருக்கிறோம், முடியாதா என்ன?  இருந்தாலும் இதை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டாமா? அதற்கும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படி. சுஜாதா சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதியுள்ளார்.

நிறைய பாருங்கள், கேளுங்கள், கவனியுங்கள், கதைக்குக் கரு கிடைக்கும் என்றார். பத்திரிகை, திரைப்படத்தில் எல்லாம் காதல்கதைகள்தான் நிறைய வருகின்றன. அதற்குதான் நிறைய மவுசு இருக்கும் போலிருக்கிறது என்று காதலர்களை கவனிக்க சென்னைக் கடற்கரைக்குச் சென்றேன்.  ஒரு காதல் ஜோடிக்குப் பத்தடி தள்ளி அலைகளைப் பார்த்து ஏதோ தத்துவவாதி போல் உட்கார்ந்து  கொண்டு காதைத் தீட்டிக் கொண்டேன். ஒரு சத்தமும் வரக் காணும். அந்தப் பையன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், பேச்சரவமே இல்லை.

விழியாலே பேசி
விரலாலே கோதி
கழியாதோ இவ்விரவு
என்று புதுக்கவிதைக்கும் எதுகை மோனைக் கவிதைக்கும் நடுவில் ஒன்று தோன்றியது.  கதைக்குதான் விஷயம் கிடைக்கவில்லை. இன்னமும் 50அடி தள்ளி இன்னொரு ஜோடி அருகே சென்றேன். ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது ஒரு வில்லன் வந்தான். அப்பெண்ணுடைய அப்பா இல்லை. ஒரு சுண்டல் பையன் ரூபத்தில் வந்து அவர்களைத் தொந்தரவு செய்ததும் அவர்கள் எழுந்து போய்விட்டார்கள்.

அன்றைய முயற்சி தோல்வியடைந்தது.  காதலர்களை எங்கே பார்க்கலாம்? சினிமாக் கொட்டகையில், படம் ஓடும் சத்தத்தில் ஒன்றும்  நமக்குக் கதை கிடைக்காதே?  வேறு எந்த இடம்? அடுத்த ஞாயிற்றுக் கிழமை பூங்காவுக்குச் சென்றேன்.  அங்கே காதல் ஜோடி இல்லை. குழந்தையுடன் கணவன், மனவிதான் இருந்தார்கள். இருந்தாலும் கிடைத்தது ஒரு கதை. அப்போது  ( 2008இல்) எழுதிய அக்கதையை பதின்மூன்று பேர் படித்திருக்கலாம். இன்று உங்களுக்கு அதை அளிக்கிறேன்


பூங்காவில் ஒரு பூசல்

அரேபிய இசையை விரும்பிக் கேட்கும் குமார் அன்று ஆல மர நிழலில்
 இன்னும் ஒரு வயதை எட்டாத தன்னுடைய குழந்தை தவழ்ந்து
 விளையாடுவதைப் பார்த்துக் கொண்டும், பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டும் இருந்தான். குமாரின் மனைவி சுமதி ஒரு
கதைப் புத்தகத்தைப் படிப்பதில் மூழ்கியிருந்தாள்.
 வெயில் இல்லாமல் விளையாடுவதற்கு வசதியாக  அந்நிழல் இருந்தது. அங்கே ஒரு  மூலையில் நாடோடிக் குடும்பம் வாழ்ந்து வந்தது. அதைத்தான் பெரிய புகாராக குமார் சொல்வான்.  அந்த நாடோடிக் குழந்தைகள் தனது குழந்தையை கவனித்துக் கொள்ளும் என்பதால் குமாரின் மனைவி அதை பெரிதுபடுத்தியதேயில்லை.

இசை இப்போது உச்சகட்டத்திற்குச் செல்ல குழந்தை குதிக்க ஆரம்பித்தாள்.
என்ன குமார்
          |நமது|
          |மகள்|
          |துள்ள|
நீங்கள் கவனிக்காமல் என்ன செய்கிறீர்கள், பாருங்கள். பிறகு குழந்தை
யாருடைய உதவியின்றி தவழ்ந்து சென்று தாழ்ந்திருந்த  ஆலின் விழுதைப் பிடித்தாள்.

|உதவி| இன்றி
|தவழு| கின்ற குழந்தை
|விழுது| நோக்கிச் செல்வதைப் பாருங்கள் என்று சுமதி பெருமையுடன்
குமாரிடம் கூறினாள்.

நாடோடிப் பையன் ஓடி வந்து காவலுக்கு குழந்தையருகில் நின்றான். குமார்,
போ,போ என்று அவனை விரட்டினான். இந்த மைதானம்  சரியான
        |அகதி|
        |கண்ட|
        |திடல்|
என்று சலித்துக் கொண்டான். சுமதிக்கு வருத்தமாக இருந்தது.
|அரபு|
|ரசிகா|
|புகார்| சொல்லாதே. அவர்களால் நமக்கு பாதுகாப்புதான் என்றாள்.
அப்போது தும்பி ஒன்று அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததைக் கண்டு குழந்தை இன்னமும் மகிழ்ந்து துரத்தச் சென்றது. பிடிக்க முடியாமல் போனதென்று வருந்தியது. நாடோடிப்பையன் குழந்தையிடம், கவலைப்படாதே
|போவது|
|வ ரும்|
|து ம்பி | என்று கூறினான். அவனுடைய அம்மா சாப்பிட அந்தப் பையனை அழைத்தாள். குழந்தையுடன் விளையாடும் ஆர்வத்தில் தட்டில் சாப்பாட்டுடன் வந்து  குழந்தையருகே உட்கார்ந்துகொண்டான். அவ்வளவு குழம்பை இந்தச்
சிறுவன் சாப்பிடுவானா என்று வியந்த சுமதி
| ஆகாத|
| காரம் |
| தம்பி | என்று அவனிடம் கூறினாள். குமாருக்கு சுமதி அந்தைப் பையனிடம்
பேசியது பிடிக்கவில்லை. உடனே பூங்காவிலிருந்து கிளம்பிவிட்டான். ஏன் அவசரம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று கூறினாள்.
அதற்கு குமார் ஏதும் பேசாதே என்று விரலால் வாயை மூடி சாடை காட்டினான்.
குமாரின் போக்கை அறிந்த
                    | சுமதி  |
                    | மவுன |
                    | தினம் |
இனிமேல் என்பதைப் புரிந்து கொண்டு வீட்டிற்கு அமைதியாகக் கிளம்பினாள்.

Comments

கரடி ரயில் டில்லி ; சிவாஜி வாயிலே ஜிலேபி; க்கு அப்புறம் இத்தனை ஜிலேபி!
மறந்துட்டேன், தி மு க, முயல், கல்வி.
Sundar said…
நடிகர் திலகம் கதையை படித்திருந்தால் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று புகழ்ந்திருப்பார் என்று சொல்ல வந்தேன். ரவி முந்திக்கொண்டு விட்டார்! :-)
M Balachandran said…
தாங்கள் ஒருவகடகவியும்லவா
M Balachandran said…
விகடகவி என்று படிக்கவும்
M Balachandran said…
விகடகவி என்று படிக்கவும்

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்