Skip to main content

விடை 3682

இன்று காலை வெளியான வெடி:
இணையற்ற அமாவாசை வந்ததால் வெளிப்பட்ட ஒரு மிருகம் !  (2)
இதற்கான விடை:  கரி (யானை)

(இணையற்ற = ) நிகரிலா என்பதில் நிலா போய்விட்டால் அமாவாசைதானே!

குகையிலே ஒளிந்து வாழ்ந்துகொண்டு  அமாவாசைக்கு மட்டும் வெளியே வரும் மிருகம் பற்றி புதிர் அமைக்க ஆசைதான், ஆனால்   நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சியை நான் பார்ப்பதில்லையென்பதால், அது பற்றிய விஷய ஞானம் இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அமாவாசை இருட்டில்  அட்டைக் கரியாகத் தோன்றும் யானைதான்.

இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட  விடைகள் இங்கே.

அமாவாசையில் ஆனை
வரியோடு  காட்டில் வளையவரும்  வேங்கை
அரிதாகத் தென்படுமாம் ஆங்கு    நரியும்
திரிவதற்கு அஞ்சும்  திசையறியா நேரம்
கரிவரும் கானகத்தில்  காண்

இதற்கு அர்த்தமெல்லாம் கேட்கக் கூடாது. சும்மா பொழுது போக்குக்காக  கரி, நரி, வரி என்று எதுகையாக சொற்களை யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு நேரிசை வெண்பாவைக் கோத்துவிடலாம் என்று  தோன்றியது. அவ்வளவுதான்.

Comments

Muthu said…
நிகரிலா புதிர்க் கட்டமைப்பு! இணையற்ற என்பதற்கு இணையாக "உயர்ந்த", "மேலான", எல்லாம் தோன்றின; "நிகரிலா" தோன்ற அமாவாசை கழிய வேண்டியிருந்தது. இரண்டெழுத்து மிருகம் என்றால் நாய், பூனை, மாடு, காளை, புலி, யானை எல்லாம் வந்தன; கரி அமாவாசை இருட்டில் மறந்து விட்டது. ரிஷபத்திற்குத் தமிழ்ப் பெயர் நேற்று அறிந்தேன். அமாவாசைக்குத் தமிழில் "காருவா" என்று இன்று புதிருக்கு விடை தேடுகையில் அறைந்து கொண்டேன்.

வெண்பாவே எளிதாகப் புரிகிறது!

பாராட்டுகள்!!
Muthu said…
"*அறிந்து*" கொண்டேன்; "அறைந்து" அல்ல!
உஷா said…
விடையை எழுதியவர் பட்டியல்?

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்