Skip to main content

கோடையில் மழை வரும்?

கோடை தகிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆனால் மரங்களுக்கு சென்னையில் இப்போதுதான் கொண்டாட்டம்.  ஒதியமரம் (Indian Ash tree, Lannea coromandelica)  இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு பச்சையாகப் பூக்களைக் முடிந்துவிடாதக் கூந்தல் போல் சரிய விட்டுக் கொண்டிருக்கிறது.  




அரக்குநிறக் காய்களைக் கொண்ட copperpod என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மயில் கொன்றை தரையெங்கும் பூக்களைக் கொட்டி இறைத்துள்ளது.




கொய்யா, நெல்லி இவற்றைவிட நோஞ்சானாக இருக்கும் சரக்கொன்றை (Cassia Fistula, Indian Laburnum, Amaltas) மரம் கோடையில் மட்டும்தான்  பூப்பேன் என்று  பூத்துக் குலுங்குகிறது.










பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் எப்போதும்
பொன்னார் மேனியனே என்று சிவனைக் கொன்றை அணிந்தவன் என்ற விவரிக்கும் பாடலைப் பாடுவான்.
ஆனால் அதைவிட சுவாரசியமான தகவல்கள் சங்கப்பாடல்களில் இருக்கின்றன.    தலைவி  வெளியூர் சென்ற தலைவன் திரும்புவதற்காகக் காத்திருக்கிறாள். கார்காலத்தில் திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்றவன், இன்னும் வரவில்லை. கொன்றைகளோ பூத்துக்  கார்காலம் வந்ததை அறிவித்துவிட்டன.  தன்னைத்தானே தேற்றிக் கொள்ள தலைவி  தோழியிடம் கூறியதாகப் புலவர் அழகாகக் கூறுகிறார்:

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங்  கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே


    (ஒதலாந்தையார்,  குறுந்தொகை)

"அதென்ன என் தலைவன்தான் பொய் சொல்ல மாட்டானே. அவன் வரவில்லை என்றால் இது கார்காலமாக இருக்க முடியாது. இந்தக் கொன்றை மரங்கள் சொல்வதை நான் ஏற்க மாட்டேன்" என்கிறாள்.
தலைவன், தலைவி விவகாரத்தை அப்படியே விடுவோம். இப்பாடலில்  இயற்கை பற்றிய செய்தியைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

இக்காலங்களில் கொன்றை எப்போதும் சித்திரையில்தான் பூக்கிறது. சித்திரை மழைக்காலம் கிடையாது. சங்கப்புலவர்கள் இயற்கை பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தவறில்லாமல் கவனித்து எழுதுவார்கள்.
அப்படி என்றால் ஏதோ பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
பூக்கள் பூக்கும் பருவமும் மழைப் பருவமும் இணைந்து வந்தது இப்போது மாறியுள்ளது.   க்ளோபல் வார்மிங், பருவநிலை மாற்றம் என்பதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே  தொடங்விட்டதோ?

Comments


இந்த அழகில் மரங்களும் பூக்களும் எங்கு படமெடுக்கும் பட்டன?
Vanchinathan said…
முதலில் வரும் ஒதிய மரத்தின் படத்தை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு மே மாதத்தில் எடுத்தேன். ஒற்றை மரமான சரக்கொன்றையை சென்னையில் எங்கள் கல்லூரியில் ஒரு வாரம் முன்பு எடுத்தேன். தெருவே சரக்கொன்றையாக இருப்பது, டில்லியில், இணைய இறக்குமதி.
மயில் கொன்றை (Copperpod) எல்லா படங்களும் இணையத்திலிருந்து எடுத்தவை. சென்னையில் இது ஏராளமாக இருக்கிறது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்