நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்.
சுண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய்
இப்புதிருக்குப் பொருத்தமாய் பல விடைகள், வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்கப்படவேண்டியவை என்று தெரிந்து கொண்டேன்
(1) வாழைக்காய் மட்டும் பழமாகவும் உண்ணப்படுவது, மற்றவை காய்களாகவே பயன்படும் என்று விடை கூறிய மீ கண்ணன், மீனாக்ஷி, அனிதா காந்தி, பானுமதி இவர்களுக்குப் பாராட்டுகள்.
(2) சுண்டைக்காய் மட்டும் அப்படியே முழுதாகச் சமைக்கப்படுவது, மற்றவையெல்லாம் நறுக்கிய துண்டுகளாகவே சமைக்கப்படும் என்ற
ராம்கி கிருஷ்ணன் அளித்த விடை ஏற்கத்தக்கது. பாராட்டுகள்.
(3) அமாவாசையன்று வாழைக்காய் மட்டும் சமைக்கலாம் என்ற மரபை(பௌர்ணமியன்று!) சுட்டிகாட்டியிருக்கிறார் சொக்கலிங்கம். ஏற்றுக்கொள்ளலாம்.
(4) பத்மா, ஜோசப் அமிர்தராஜ் இருவரும் வாழைக்காய் மட்டும் தோலை நீக்கிச் சமைக்கப்படவேண்டிய காய் மற்றவை தோலோடு சமைக்கப்படுபவை என்ற பொருத்தமான விடையளித்திருக்கிறார்கள். பாராட்டுகள் (வாஞ்சிநாதனின் விடையும் இதுவே. தினம் காலையில் வீட்டில் சமையலுக்கு உதவுகிறேன் என்று கையில் கத்தியுடன் கிளம்பும்போது இன்று பூசனிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு இதையெல்லாம் திட்டிக் கொண்டே, வெண்டைக்காயை எவ்வளவு சமர்த்தான காய் என்று பாராட்டி நினைக்கும்போது உருவான புதிர் என்று புதிர் தோன்றும் காரண ஆய்வாளர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்).
(5) வடிவத்தால் சுண்டை மட்டும் உருண்டையாய்த் தனித்து நிற்கிறது என்று சொக்கலிங்கமும், ஜோசப் அமிர்தராஜும், ஜ்யாமெட்ரி விளக்கத்துடன் இரண்டாவது விடையை அளித்ததற்குப் பாராட்டுகள்.
(6) அம்பிகாவும், ஜோசப் அமிர்தராஜும் வெண்டைக்காய், தனியாய்க் காய்ப்பதால் தனித்திருக்கிறது என்கிறார்கள், மற்ற காய்களெல்லாம் கொத்தாகத் தோன்றுபவை என்று தாவரவியல் காரணத்தை அளித்திருக்கின்றனர். ஏற்கத்தக்கது, பாராட்டுகள்.
இப்புதிரை உருவாக்கியபோது இத்தனை விடைகள் சாத்தியமென்று நான் நினைக்கவில்லை. எப்படியெல்லாம் யோசிக்கலாம் என்று இன்று வந்த உங்களது விடைகளிலிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். (எச்சரிக்கை: இப்படி உங்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை இன்னொருநாள் புதிராக மீண்டும் உங்கள் மீதே வீசுவேன் என்று மிராண்டா அடிப்படையில் தெரிவித்துக் கொள்கிறேன்).
இந்த 50வது திரிவெடியை வண்ணமயமாக்கியதற்கு நன்றி.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments